ஸ்பிக்நகர், மே 21: தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் முள்ளக்காடு அருகே வந்துகொண்டிருந்தபோது பைக்கில் வந்த வாலிபர் காரை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காரும், பைக்கும் மோதியது. இதில் பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
அடையாளம் தெரியாத 2 உடல்கள் மீட்பு: தூத்துக்குடி ஹார்பர் சாலையில் உப்பாத்து ஓடை அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தது யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.