×

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி, மே 19:    தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முடிவடைந்த பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் பொதுபார்வையாளர் சுரேஷ்குமார், கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 257 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு செய்யும் நடைமுறைகள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் அதற்கான ஆவணங்களில் வேட்பாளர்களின் முகவர்களிடம் தவறாமல் கையெழுத்து பெறுதல், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவினை துவங்கப்படுவதையும், வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவுகளை தவறாமல் அழிக்கப்படுகிறதா என்பதையும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் போது வேட்பாளர்களின் முகவர் ஒருவர் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.

சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தால் உடனடியாக பொதுபார்வையாளரிடம் தெரிவிக்கவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார். முன்னதாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தேர்தல் பணிக்கான உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது.  
கூட்டத்தில் டி.ஆர்.ஓ. வீரப்பன், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சண்முகசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரகதநாதன், தேர்தல் தனிவட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு