கோவில்பட்டி அருகே ரூ.5 லட்சம் கேட்டு பேராசிரியர் காரில் கடத்தல் 4 பேர் கைது; 6 பேருக்கு வலை

கோவில்பட்டி, மே 19: கோவில்பட்டி அருகே நிலம் விற்றது தொடர்பாக ரூ.5 லட்சம் கமிஷன் கேட்டு பேராசிரியரை காரில் கடத்தி சென்ற கும்பல் அவரிடம் இருந்து நகை, பணத்தை பறித்து சென்றது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த தனிப்படையினர் 6 ேபரை தேடி வருகின்றனர். கோவில்பட்டி அருகே கீழபாண்டவர்மங்கலம் வடக்குதெருவைச் சேர்ந்த கோவிந்தம் மகன் ஜெயக்குமார்(53). இவர் லண்டனில் குடும்பத்துடன் தங்கியிருந்து பேராசிரியராக பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய ஜெயக்குமார் தனது நிலத்தை கடந்த மாதம் 27ம்தேதி ரூ.27 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த நில புரோக்கரான வெள்ளைச்சாமி மகன் கவியரசன்(28) என்பவர் ரூ.5 லட்சம் கமிஷன் கேட்டு ஜெயக்குமாரிடம் அடிக்கடி தகராறு செய்து மிரட்டி வந்தார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (17ம் தேதி) மாலை 3 மணியளவில் ஜெயக்குமார் வீட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நில புரோக்கர் கவியரசன், அவரது தம்பி அமிர்தராஜ்(27) மற்றும் நண்பர்கள் ராதாகிருஷ்ணன், சந்தீப், மதன், சந்தோஷ், செல்வகணேஷ், தாமஸ் உள்பட 10 பேர் வழிமறித்து தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

கூச்சலிட்ட ஜெயக்குமாரின் வாயில் துணியை அமுக்கி, அரிவாள், கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 500, 2 மோதிரம், 3 பவுன் செயின் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அவரது வீட்டிற்குள் அழைத்து சென்று, வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், செக் புக், பத்திரம், 2 புரோ நோட்டுகளை பறித்தனர். மேலும் 5 வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கிவிட்டு கவியரசன் உள்ளிட்ட 10 பேர் கும்பல் அவரை மீண்டும் காரில் கடத்தி சென்று இரவில் மந்திதோப்பு மலையடிவாரத்தில் வைத்து அவரை தாக்கிவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து ஜெயக்குமார் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்பி முரளிராம்பா உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் கிழக்கு, மேற்கு இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன் மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் நின்ற ராதாகிஷ்ணன், சந்தீப், செல்வகணேஷ், தாமஸ் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்ருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள கவியரசன் உள்ளிட்ட 6 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: