திருப்பூரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

திருப்பூர்,மே19: திருப்பூரில், மகன், மகளுடன், தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் சாமுண்டிபுரம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரதீபா (35). இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை அருண்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் திடீரென அவரது வீட்டில் 10 வயது மகன் கூச்சல் போடும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அங்கு பார்த்த போது வீட்டில் பிரதீபா துப்பட்டாவை கழுத்தில் மாட்டி கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் அவருடைய மகன் மற்றும் மகளும் மயக்க நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் அருண்குமாரின் மகனும், மகளும் சகஜ நிலைக்கு திரும்பினார்கள். ஆனால் பிரதீபா மட்டும் மேல்சிகிச்சைக்காக குமார்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகலவறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

இதில் பிரதீபா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவருடன் வேலை செய்யும் ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவருடைய கணவர் அருண்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இரவு தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்குமார் வேலைக்கு சென்ற உடன் பிரதீபா 2 குழந்தைகளிடமும் அப்பா வந்து மீண்டும் திட்டுவார். எனவே நாம் 3 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

பின்னர் 2 குழந்தைகளையும் வீட்டில் இருந்த கம்பியில் தனித்தனி துப்பட்டாவில் தொங்க விட்டுள்ளார். பின்னர் அவரும் மற்றொரு துப்பட்டாவில் தூக்குப்போட்டுள்ளார். ஆனால் துப்பட்டா அறுந்து விழுந்ததால் 2 குழந்தைகளும் கீழே விழுந்தனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அருண்குமாரின் மகன் கூச்சல் போட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: