தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்

திருப்பூர், மே18:திருப்பூர் மாவட்டம் வாக்குகள் எண்ணும் மையம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமி நேற்று தெரிவித்தார். திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிபாளையம் மற்றும் அந்தியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான அனைத்து வாக்குகளும் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் வரும் 23ம் தேதியன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து, நேற்று வாக்குகள் எண்ணும் மையத்தினை சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனிச்சாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பார்வையிட்டதுடன் வாக்குகள் எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷ்னர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: