தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மூடல்

ஊட்டி, மே 19:  தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள மாடங்கள் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம், இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா போன்றவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்குள் சென்று புகைப்படங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கண்ணாடி மாளிகையில் ஏராளமான தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல வடிவங்களில் அங்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரங்களை காணச் செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படம் எடுக்கும் மோகத்தில் தொட்டிகளை தட்டி விடுவதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் கூட்டம் அதிகமாக வரும் நிலையில், ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்வதாலும் தொட்டிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை கண்ணாடி மாளிகை மூடப்பட்டது. கண்ணாடி மாளிகை வரை வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும், அதன் முன் பகுதியில் நின்று புகைப்படம் எடுத்துச் சென்றனர். உள்ளே செல்ல முடியாத நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: