கொடைக்கானல், மே 19: கொடைக்கானல் நகராட்சி சார்பில் புதிய படகு குழாம் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படும் என ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார். கொடைக்கானல் நகரின் இதயமாக விளங்கும் நட்சத்திர ஏரியில் அரசு, தனியார்கள் சார்பில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. கொடைக்கானல் நகராட்சியின் சார்பாக கலையரங்கம் முன்பு படகு குழாம் இயங்குகிறது. இங்கு பழுதடைந்த படகுகள் மற்றும் நடைபாதைகள் சீரமைத்தல், பாதுகாப்பு கவச உடை வாங்குதல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் நடந்து வந்தது. இப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று புதுப்பிக்கப்பட்ட புதிய படகு குழாமினை நகராட்சி ஆணையாளர் முருகேசன் திறந்து வைத்தார். இதில் பொறியாளர் சண்முகம், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஒப்பந்தகாரர் முரளி, சுகாதார ஆய்வாளர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.