திருச்சுழி, மே 19: திருச்சுழி அருகே, டெண்டர் விட்டும் சாலையை சீரமைக்காததால், அரசு பஸ்சை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. திருச்சுழி அருகே, மறவர்பெருங்குடியிலிருந்து சுத்தமடம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சுத்தமடம், சலுக்குவார்பட்டி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிக்கும், கூலித் தொழிலாளிகள் வேலைக்கும் வெளியூர்களுக்கு செல்ல அவதிப்படுகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட சீக்கிரம் செல்ல முடியவில்லை. சாலையை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.
ஆனால், அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் கைகோர்த்துக் கொண்டு, டெண்டர் விட்டும் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், மறவர்பெருங்குடி-சுத்தமடம் சாலையை சீரமைக்ககோரி, திருச்சுழி அருகே, சலுக்குவார்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், ஊருக்கு வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யவதி, ரெட்டியபட்டி சார்பு ஆய்வாளர் வீரசோலை ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைக்கவும், கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், கிராம மக்கள் பஸ்சை விடுவித்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘டெண்டர் விட்டும் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், ஒப்பந்ததாரரிடம் எங்களால் பேச முடியாது என கூறுகின்றனர். இதனால், அரசு பஸ்சை சிறைப்பிடித்தோம். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அருப்புக்கோட்டை-சாயல்குடி சாலையில் மிகப்பெரும் மறியல் நடத்துவோம்’ என்றனர். திருச்சுழி அருகே பரபரப்பு விருதுநகர் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு