நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோயிலில் விசாக திருவிழா கொடியேற்றம் 27ம்தேதி தேரோட்டம்

கும்பகோணம்,மே 19:  கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோயிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு நேற்று  கொடியேற்றம் நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரமாகும். நாதன்கோவில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும்.நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சிறப்பலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஜெகன்நாதப்பெருமாள் கொடிமரத்தின் முன்பு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து  பல்வேறு வாகனங்களில் வரும் 27ம்தேதி வரை விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.முக்கிய விழாவான வரும் 24  ம்தேதி மாலை 4  மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 26  ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டமும், 27ம்தேதி  மாலை 6  மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சியும், திருமஞ்சனமும், நாலாயிர திவ்ய பிரபந்தசேவை நிகழ்சியும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள்  செய்து வருகின்றனர்.

Related Stories: