×

கண்ணிய குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

புதுக்கோட்டை, மே 19:  கண்ணிய குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர் மூர்த்தி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கண்ணிய குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நாக்கினை அறுக்க வேண்டும் என கூறினார். கருத்து சொல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. தேர்தல் பிரசாரத்தின் போது கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க அமைச்சர் உள்ளிட்ட அனைத்து குடிமகனுக்கும் உரிமை உள்ளது. எனவே அத்துமீறி பதவியினை துஷ்பிரயோகம் செய்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags : Rajendra Balaji ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...