×

பைக் மீது லாரி மோதி 2 பேர் பலியான வழக்கு டிரைவருக்கு ஓராண்டு சிறை: குளித்தலை கோர்ட் தீர்ப்பு

குளித்தலை, மே19: பைக் மீது லாரி மோதிய வழக்கில் 2 பேர் பலியான வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனைவிதித்து குளித்தலை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல். திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கோபால் ஆகிய இருவரும் கடந்த 2015ம் ஆண்டு குளித்தலை வழியாக மாயனூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.இதில் மணிவேல், கோபால் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக இறந்தனர். இச்சம்பவத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம், செவந்திப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்  மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், தீர்ப்பு வழங்கினார். அதில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராஜ்குமாருக்கு பைக்கை சேதப்படுத்தியதற்காக ஒரு மாத சிறை தண்டனையும், 2 பேரின் இறப்புக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக தலா ஆறு மாத வீதம் ஓராண்டு சிறை தண்டனையும் இதனை ஏக காலத்திற்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். மேலும் விபத்தில் இறந்த மணிவேல், கோபால் ஆகியோரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக தலா ரூ.25 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் ராஜ்குமார் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Lorry ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது