×

முத்துப்பேட்டை அருகே சாவிலும் இணைபிரியாத தம்பதி கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் மயங்கி விழுந்து சாவு

முத்துப்பேட்டை, மே 17:  முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(74). ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய ஐந்து  மகன், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சுப்பிரமணியன், ராஜேஸ்வரி ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர் வீடு, நல்லது கேட்டது விசேஷங்களுக்கு எங்கு சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக வயது முதிர்வு காரணமாக  உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.


இதனையடுத்து அவரது வீட்டில் உறவினர்கள் திரண்டு பரபரப்பாக இருந்த நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்து மனைவி ராஜேஸ்வரி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை முத்துப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன், மனைவி இருவரது உடல்களையும் அருகருகே வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சாவிலும் இணை பிரியாமல் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Muthupettu ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு