விருதுநகர், மே 17: விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளில் 22 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தினசரி 41 டன் குப்பைகள் நகரில் சேருகின்றன. நகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள 242 நிரந்தர பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நகரில் தற்போது 90 நிரந்த துப்புரவு தொழிலாளர்களும், 47 தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். நகரில் கடந்த ஏப்.1ம் தேதி முதல் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்ட நிலையில் குப்பைகள் வீடு, வீடாக வாங்கப்படுகிறது. குப்பைகளை வீடுகளுக்கு வந்து வாங்காத பகுதிகளில் குப்பைகள் தெருக்களிலும்,
வாறுகால்களிலும் மக்கள் கொட்டி வருகின்றனர். நகரில் குப்பைகள், வாறுகால் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கையுறை, காலுறையின்றி வெறும் கைகளாலும், குப்பை அள்ள உபகரணங்கள் இன்றி சாக்குகள், கோணிபைகளில் குப்பைகளை போட்டு லாரிகளில் ஏற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பை, வாறுகால், பாதளாச்சாக்கடை மேன்ஹோல்களில் கழிவுகள், அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கையுறை, காலுறைகளை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.