வெள்ளகோவில், மே 17: கடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில் மாறுபாட்டை கண்டறிய வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நவீன முறையில் மண் மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கி.சுமதி கூறியவதாவது: வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள 17 வருவாய் கிராமங்களிலும் மொத்தம் 272 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மண்மாதிரிகள் சேகரிப்பு பணி தொடங்கி உள்ளது. நடப்பு ஆண்டில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் தமிழக அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மண் வளத்தில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், ஏற்கனவே வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் உர பரிந்துரைகளை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்காகவும், புது அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் தலா 10 இடங்களில் பரவலாக துல்லியமான முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் சத்துக்களை அறிய ஆய்வகத்திற்கு அனுப்படுகின்றன.