புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். இருப்பினும் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. புதுக்கோட்டை நகராட்சி பகுதி முழுவதும் சேமிக்கும் குப்பைகளை இங்கு கொட்டி வருவதால் பெரும் குப்பைமேடாக உள்ளது.இந்நிலையில் இந்த நகராட்சி குப்பை கிடங்கில் மாலை மூன்று மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி பெரும் புகையை கக்கியபடி எரியத் தொடங்கியது. இந்த தீவிபத்து குறித்து அப்பகுதியினர் புதுக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தீ பரவியதால் மேலும் 3 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.