சேலம், மே 17: சேலத்தில் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வீராணம் அருகே தைலானூர் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகன் வெங்கடேசன்(30). ரவுடியான இவர், தனது கூட்டாளி மணிகண்டனுடன் சேர்ந்து மார்ச் 22ம் தேதி கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அடியில், சர்வீஸ் ரோட்டில் பைக்கில் வந்த ஆண், பெண்ணை கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர், அவர்களிடம் இருந்து தங்க நகையை பறித்துக் கொண்டு, அந்த பெண்ணை ஆபாசமாக செல்போனில் படமெடுத்து மிரட்டினர். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.