×

செய்யாறு அருகே துணிகரம் வீட்டின் பூட்டு உடைத்து 48 சவரன், ரூ 80 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

செய்யாறு, மே 17: செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் தங்க நகைகள், ரூ80 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அப்துல்லாபுரம் கிராமம், விநாயகா நகரை சேர்ந்தவர் கார்த்தி(38). இவர் சென்னை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மீனா(32), மகன்கள் கவுதம்(7), நிதின்(4) ஆகியோருடன், கடந்த 10ம் தேதி இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து, அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மாமனார் பிரகாஷ் என்பவர் வீட்டை அடிக்கடி பார்வையிட்டு வந்தாராம். இந்நிலையில், பிரகாஷின் மனைவிக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால், அவர் கார்த்தி வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்நிலையில் சுற்றுலா சென்று திரும்பிய கார்த்தி, நேற்று அதிகாலை அப்துல்லாபுரம் கிராமம் அருகே வரும்போது, மாமனாருக்கு போன் செய்து வீட்டை திறக்கும்படி கூறினார். அதன்பேரில் பிரகாஷ், அங்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிதுநேரத்தில் கார்த்தி குடும்பத்தினரும் அங்கு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மற்றும் ஹாலில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதிறிக் கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 48 சவரன் நகை மற்றும் ரூ80 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது.

இதுகுறித்து கார்த்தி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா சென்றவர் வீட்டில் நகை, பணம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : locker ,kairam ,house ,theft ,Satara ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்