×

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ்: ஊழல் முறைகேடுக்கு முகாந்திரம் உள்ளதால் அதிரடி

சென்னை: காஞ்சிபுரத்தில் கைத்தறித்துறை கட்டுப்பாட்டில் 22 அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் தவிர மற்ற சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கூட்டுறவு சங்கத்தில் அதிமுக சங்க நிர்வாகக் குழுவினரின் ஊழல் முறைகேடுகள் காரணமாக லாபத்தில் செயல்பட்ட அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும்  முருகன் பட்டு கூட்டுறவு சங்கமும் தற்போது  நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.34 கோடி ஊழல் நடந்தது  நிரூபணமானதால் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அதில் தொடர்புடைய மற்ற இயக்குநர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு நோட்டீஸ் வழங்க கைத்தறித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலும்  கடந்த 2017-18ம் ஆண்டில் சுமார் ரூ.2 கோடி ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் ஊழல் முறைகேடு குறித்து, இணை இயக்குநர் சாரதிசுப்புராஜ் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக சங்க மேலாண் இயக்குநர் உள்பட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2017- 18ம் ஆண்டின் சங்க தணிக்கை முடிக்கப்படாமல்  காலதாமதப்படுத்தி வந்த சங்க நிர்வாகக்குழுவினரின் போக்கால் சங்க உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு பொங்கல் போனஸ் மறுக்கப்பட்டது. சங்க தணிக்கை அறிக்கை வெளியானால் நிர்வாகக்குழுவினரின் ஊழல் முறைகேடுகள் வெளிவரும் என்பதால் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

நீண்டநாட்களாக சங்க தணிக்கை அறிக்கை வெளியிடாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் தணிக்கை அதிகாரிகளால் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தணிக்கை சான்று வெளியிடப்பட்டது. மேலும்  மறு தணிக்கை கோரிய சங்கத் தலைவரின் கோரிக்கை தணிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம், சங்கத் தலைவர் வள்ளிநாயகம், துணைத்தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம், இயக்குநர்கள் கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், சம்பத், பாஸ்கர், கீதா உள்ளிட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். அதில், சங்கத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதால் சங்க நிர்வாகக்குழுவை ஏன் கலைக்கக்கூடாது என்றும், சம்மன் அனுப்பப்பட்ட 15 நாட்களில் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவும் விரைவில் கலைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. சங்க நிர்வாகக்குழுவை கலைத்துவிட்டு கைத்தறித்துறை சார்பில் தனி அதிகாரியை நியமித்து சங்க செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டுமென்பது சங்க நெசவாளர்களின்  பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Kanchipuram Murugan Silk Cooperative Society Executive Committee: Action Against Corruption ,
× RELATED காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு...