பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் கம்பெனிகள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் சென்னை முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், தனியர் விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, விதிமீறி தண்ணீரை உறிஞ்சி விற்கும் மேற்கண்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்து தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஊராட்சி பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், நேற்று அங்குள்ள ஒரு தண்ணீர் கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமாவதி ஆகியோர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.