உப்பிலியபுரம் அருகே அதிகாலையில் வீட்டில் திருட முயற்சி சிக்கிய திருடன் போலீசில் ஒப்படைப்பு

துறையூர், மே 16:  உப்பிலியாபுரம் அருகே அதிகாலையில் வீட்டில் திருட முயன்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.  துறையூர் உப்பிலியபுரம் அருகேயுள்ள சோபனபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாலு மனைவி நித்யா(34). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நித்யா பீரோ திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது அங்கே வாலிபர் ஒருவர் பீரோவை திறந்து நகை பணம் இருக்கிறதா, என பார்த்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட நித்யா எழுந்து வெளியே ஓடி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டினுள் இருந்து தப்ப முயன்ற திருடனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரை உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட முயன்றவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வரதராஜ் மகன் கார்த்திக்(21) என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Related Stories: