அதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை

சேதுபாவாசத்திரம், மே 16: அதிக மகசூல் பெற தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது கடைமடை பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி நாட்டுரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு ஒன்றரை கிலோ இட வேண்டும். 2 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 650 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா ஒரு கிலோ, வேப்பம்புண்ணாக்கு இரண்டரை கிலோ, மூன்று வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 975 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா ஒன்றரை கிலோ, வேப்பம்புண்ணாக்கு மூன்றே முக்கால் கிலோ இட வேண்டும். நான்கு வருட கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா ஒரு கிலோ 300 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, ஐந்து வருட கன்றுக்கு தொழு உரம் 50 கிலோ, யூரியா ஒரு கிலோ 300 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.

வீரிய ஒட்டு (நெட்டை இன்ட் குட்டை மற்றும் குட்டை இன்ட் நெட்டை) ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம்புண்ணாக்கு ஒன்றரை கிலோவும், இரண்டு வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா ஒரு கிலோ, சூப்பர் 750 கிராம், பொட்டாஷ் ஒன்றரை கிலோ, வேப்பம்புண்ணாக்கு இரண்டரை கிலோ இட வேண்டும். மூன்று வருட கன்றுக்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா ஒன்றரை கிலோ, சூப்பர் ஒரு கிலோ 150 கிராம், பொட்டாஷ் 2 கிலோ 250 கிராம், வேப்பம்புண்ணாக்கு மூன்றே முக்கால் கிலோ, நான்கு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழு உரம் 60 கிலோ, யூரியா இரண்டே கால் கிலோ, சூப்பர் ஒன்றரை கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவை சமபங்காக பிரித்து வருடத்தில் இருமுறை இட வேண்டும். அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒருமுறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒருமுறையும் இட வேண்டும். மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண்சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறி விட்டு உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும், முறையாக உரமிடும்பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் ஆகிய பிரச்னைகள் குறைந்து ஆண்டுக்கு சராசரியாக 150முதல் 200 தேங்காய்கள் வரை மகசூல் பெற முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: