ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

புதுச்சேரி, மே 15: மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதேச ெசயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம், நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது. பெருகி வரும் ரசாயன ஆலைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்புநீர் உட்புகுந்து இருக்கிறது, சுற்றுசூழல் மாசு அடைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வறட்சியால் ஏழை, எளிய மக்களும், கால்நடைகளும் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர். தொடர்ந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாள்தோறும் போராடி வருகின்றனர். இச்சூழலில் மத்திய அரசு மேலும் விவசாயத்தையும், அதை நம்பியிருக்கிற லட்சக்கணக்கான மக்களையும், மீனவ சமுதாயத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமலாக்க துடிக்கிறது. இத்திட்டத்திற்கு புதுச்சேரி அரசு, அனுமதி அளிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.  புதுச்சேரி அரசின் சுற்றுசூழல் துறைக்கு தெரியாமலே மத்திய அரசு எல்லைகளை வரையறுத்து அனுமதி வழங்கியிருக்கிறது.

மக்களிடம் எவ்வித கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளையும் நடத்திடாமல் பெருமளவு மக்களை பாதிக்கும் இத்திட்டத்தை அமலாக்க அவசரமாக வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் புதுச்சேரியை பாலைவனமாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்கால தலைமுறை கடுமையான நோய்களாலும் குறிப்பாக புற்றுநோயால் அவதியுறும் சூழல் உருவாகும். சர்வதேச  அளவில் பல நாடுகளில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தின் விளைவுகளை விளக்கியும், அதை தடுத்து நிறுத்திடவும் வரும் 22ல் அறிவியலாளர்களும், சமுக அறிவுஜீவிகளும் பங்கேற்கும் கருத்தரங்கம் நடக்கிறது. மேலும் ஜூன் 6 முதல் 10 வரை புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெறுகிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: