×

மாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஊழியர் அதிரடி கைது

புதுச்சேரி, மே 15:  புதுச்சேரி புஸ்சி வீதியிலுள்ள ஓட்டலில் பல்கலை. மாணவி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர், தனது தோழியுடன் புஸ்சி வீதியிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு அங்குள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வெண்டிலேட்டர் வழியாக தன்னை ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து அறைகளில் இருந்தவர்களும் வெளியே வந்து பார்த்தபோது ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரியும் நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

 இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்திடம் மாணவி தரப்பில் முறையிடப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தபோது, மாணவி தங்கியிருந்த அறை பாத்ரூம் அமைந்திருந்த பகுதியின் பின்புறமுள்ள பகுதியில் நாற்காலி போட்டு மேலே ஏறி குளியல் அறையை அந்த நபர் வீடியோவில் படம் பிடித்தது தெரியவந்தது. இது பற்றி மாணவி தரப்பில் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து ஓட்டல் வரவேற்பாளராக பணியாற்றும் நெல்லித்தோப்பை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Employee battalion ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...