வாகனங்களை வர்த்தக வாடகைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை

புதுச்சேரி, மே 15: புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வாகனங்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்தி பயன்படுத்த வேண்டும். நடைமுறைகளுக்கு மாறாக சொந்த உபயோகத்திற்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வர்த்தகத்திற்காக வாடகைக்கு பயன்படுத்துவதாகவும் மற்றும் சில விதிமீறல்கள் போக்குவரத்து துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. சொந்த உபயோகத்திற்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. டாக்சி உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை புதுச்சேரியில் சுற்றுலாவிற்கான பதிவு செய்யக்கூடாது. மேலும், புதுச்சேரியில் வைத்து அந்த வாகனங்களை ஓட்டுதல் கூடாது.

 தமிழ்நாட்டில் வாகனங்களை பயன்படுத்த முதன்மை இசைவாணை பெற்ற பிறகு புதுச்சேரியில் அந்த வாகனங்கள், பயணங்களை தொடங்கக் கூடாது. வாகனங்களை அவற்றின் இசைவாணை நிபந்தனைகளுக்கு மாறாக வர்த்தக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது. உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளை அவைகளுக்கென வரையறுக்கப்பட்ட நிறுத்தும் இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி அல்லது இறக்க வேண்டும். மேலும், போக்குவரத்து வாகனங்களை இணைப்பு சாலைகள் உள்ள இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது. அதே சமயத்தில் எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சொந்த உபயோகத்திற்கான வாகனங்களை போக்குவரத்து காரணங்களுக்கான வாடகை செலுத்தி பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து துறையின் உரிய அனுமதி பெற்று வாகனங்களை இயக்காதவர்களின் வாகனத்தின் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை கேட்டுக் கொள்கிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: