விழுப்புரம், மே 15: உள்ளாட்சித்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 23ம் தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 29ம் தேதியன்று அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து 133 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு வாக்குச்சாவடி இறுதி பட்டியல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 4,690 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளில் 215 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 285 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 5,190 வாக்குச்சாவடிகள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 23ம் தேதியன்று வெளியிடப்பட்டது.அதன் பிறகு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து எந்தெந்த பகுதிகளில் கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஊரக பகுதிகளில் 42 வாக்குச்சாவடி மையங்களை கூடுதலாக சேர்த்து 4,732 வாக்குச்சாவடி மையங்களை அமைக்கவும், நகராட்சி பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளை கூடுதலாக சேர்த்து 225 வாக்குச்சாவடி மையங்களை அமைக்கவும், பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததன்பேரில் ஒரு வாக்குச்சாவடி மையத்தை குறைத்து 284 வாக்குச்சாவடி மையங்களை அமைக்கவும் பட்டியல் தயாராகி அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.