சிறுமியிடம் சில்மிஷம் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் நீலா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது 4 வயது மகள், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம், வீட்டின் வெளியே விளையாடிய போது, திடீரென மாயமானாள். அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டு உரிமையாளர் ஜெய்லாபுதீன் (72) வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு  சென்றபோது, முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது.

சிறுமியை மீட்ட நீலா, இதுபற்றி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜெய்லாபுதீனை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது, ஜெய்லாபுதீன் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: