பெற்றோர் திட்டியதால் மாயமான சிறுவர்கள் மீட்பு

அண்ணாநகர்: முகப்பேர் கிழக்கு ஜானகி கார்டன் சர்ச் சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது மகன்கள் சந்தோஷ் (எ) பழனியப்பன் (16), சஞ்ஜய் சரவணன் (15). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10ம்  வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சரியாக படிக்கவில்லை என்று, கடந்த 10ம் தேதி செந்தில்குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சந்தோஷ், சஞ்ஜய் ஆகிய இருவரும், தந்தையின் ஏடிஎம் கார்டு மற்றும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வௌியேறினர்.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகன்கள் கிடைக்காததால் செந்தில்குமார் இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் சிறுவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சிறுவர்களை மீட்டு நேற்று மதியம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்களின் தந்தை செந்தில்குமாரை வரவழைத்து சிறுவர்களை ஒப்படைத்தனர்.

Related Stories: