12 வயது சிறுமிக்கு ரோபோடிக் உதவியுடன் பித்த நீர்க்கட்டி அகற்றம்

புதுச்சேரி, மே 14:  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் முதன் முதலாக வயிற்று வலியால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த 12 வயது சிறுமிக்கு பித்தப்பையில் இருந்த பித்த நீர்க்கட்டி அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை மயக்கவியல் மருத்துவர் டாக்டர் சந்தீப் மிஸ்ரா தலைமையில் டாக்டர்கள் நவீன், பிபேகானந்த் ஜின்டால், கலையரசன் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்களை கொண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பிபேகானந்த் ஜின்டால் கூறுகையில், `பித்த நீர்க்கட்டி என்பது பித்த நாளத்தில் பித்த நீர் குழாயில் தோன்றி பித்தப்பையில் சிதைவை ஏற்படுத்தும். இந்த பித்த நாளம் கல்லீரலில் இருந்து பித்த நீரை வடித்து குடலுக்கு அனுப்புகிறது. வழக்கமாக இதுபோன்ற நோயாளிகளுக்கு வயிற்றை கிழித்து பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கான நோயாளி நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அதுமட்டுமின்றி அதிக வலியால் அவதிப்பட நேரிடும். அறுவை சிகிச்சை செய்த வயிற்றுப்பகுதியில் பெரிய வடு தோன்றிவிடும். இந்த அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் ரோபோடிக் உதவியுடன் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவமனையில் குறுகி காலம் இருந்தால் போதும், குறைந்த வலியுடையது. அறுவை சிகிச்சைக்கு பின்பு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததற்கான எந்த வடுவும் இருக்காது.

 ரோபோ உதவியுடன் நிகழ்த்தப்பட்ட இந்த பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு 5வது நாள் சிறுமி மகிழ்ச்சியுடன் நடக்கிறாள். அவளால் முழு உணவையும் எடுத்துக்கொள்ள முடிந்தது. இத்தகைய அறுவை சிகிச்சை தென் இந்தியாவில் முதன் முதலில் ஜிப்மர் மருத்துவமனையில்  குழந்தைக்கு ரோபோ உதவியுடன் இந்த பித்தப்பை நீர்க்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய அறுவை சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிக குறைந்த கட்டணத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைள் செய்யப்படுகின்றன. ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை 350 நோயாளிகளுக்கும், 45 குழந்தை நோயாளிகளுக்கும் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: