மூடி கிடக்கும் ஏடிஎம் மையங்கள்

திருக்கனூர், மே 14:   திருக்கனூரில் தேசிய வங்கிகளுக்கு உட்பட்ட 2 ஏடிஎம் மையங்கள் மூடி கிடப்பதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரி அடுத்து திருக்கனூர் முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதியை சுற்றி கூனிச்சம்பட்டு, செட்டிபட்டு, மணலிபட்டு, மண்ணாடிப்பட்டு, சுத்துக்கேணி, கொடாத்தூர், கொ.மணவெளி, சோம்பட்டு, செல்லிப்பட்டு, சோராப்பட்டு, பி.எஸ்.பாளையம், விநாயகம்பட்டு, வம்புபட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புதுச்சேரி கிராமங்கள் உள்ளது. இதுதவிர, திருவக்கரை, சித்தலம்பட்டு, கொடுக்கூர், மதுரப்பாக்கம், ஐவேலி, பொம்பூர், திருவள்ளிகுப்பம், மூங்கில்பட்டு உள்ளிட்ட தமிழக கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களின் மையப் பகுதியாக விளங்கும் திருக்கனூரில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசு அலுவலகங்கள், 2 தேசிய வங்கிகள், ஒரு கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இங்கு தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழு மகளிர் என அனைவரும் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் பணம் எடுப்பதற்கு இந்த வங்கிகளின் முன்பு 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு பணத்தை எடுத்து வந்தனர்.

 ஆனால் கடந்த 3 நாட்களாக 2 ஏடிஎம்களிலும் பணமின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை. இதனால் அவர்கள் மதகடிப்பட்டுக்கு சென்று அங்குள்ள ஏடிஎம் மூலம் பணம் எடுத்துவர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கருதி கொண்டு 2 ஏடிஎம் மையங்களும் வழக்கம்போல் இயங்க தேசிய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: