ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக தொடர் போராட்டம்

புதுச்சேரி, மே 14: புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என புதுச்சேரி விவசாயிகள் அறிவித்துள்ளது.இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் கீதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர் கொம்யூன் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது. புதுச்சேரி அரசை கலந்து ஆலோசிக்காமலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்தை கேட்காமலும் தான்தோன்றித்தனமாக செயல்படும் மத்திய பாஜக அரசின் இந்த செயல்பாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாழ்படுத்தும் போக்காகும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான நிலையாகும். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அந்த எதிர்ப்பை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்குமானால் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறோம். மாநில அரசும் இத்திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக நின்று செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: