சின்னசேலம், மே 14: வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலேயே கொட்ட வேண்டும் என்று சமுதாய சீர்திருத்த இளைஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சி
யில் அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், மேட்டுப்பாளையம், அம்மாபேட்டை, வெங்கட்டம்மாபேட்டை ஆகிய கிராமங்கள் அடங்கி உள்ளது. இதில் கச்சிராயபாளையம், வடக்கநந்தல், அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்த தெருக்களில் சேரும் குப்பைகளை சேமித்து தரம் பிரிக்கும் வகையில் அக்கராயபாளையம் பெரிய குன்றுக்கு அருகில் வடக்கநந்தல் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உள்ளது. குப்பைகளை தரம்பிரிக்க பெண் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் அங்கு குறைந்த அளவிலான குப்பைகளை மட்டுமே கொட்டி தரம் பிரிப்பதாக கூறப்படுகிறது. இன்னும் மீதி உள்ள குப்பைகளை அக்கராயபாளையம் புதுகாலனி அருகில் உள்ள குன்றுமேட்டின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தில் கொட்டி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் அடங்கும். குப்பைகள் சேர்ந்த பின்பு அதை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்று சூழல் மாசுபடுகிறது. அந்த வழியே செல்லும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.