நாங்குநேரி, ஏப். 26: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த திட்டுவிளை அண்ணா நகரை சேர்ந்தவர் பாதுஷா (46). இவர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் நெல்லைக்கு வந்து சென்ற இவர் சம்பவத்தன்று திட்டுவிளை மத்தியாஸ்நகரை சேர்ந்த பாலாஸ் மகன் விக்னேஷ்(30) என்பவரின் ஆட்டோவில் வேலைக்காக அலுவலகத்திற்கு வந்தார்.
நாங்குநேரி அருகே வாகைக்குளம் நான்கு வழிச்சாலையைக் கடக்கும்போது மாடு ரோட்டின் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமலிருக்க ஆட்டோவை நிறுத்திய போது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் விக்னேசுக்கு வலது கால் தொடையில் முறிவு ஏற்பட்டது. பாதுஷாவுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்சன் சாம்ராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.