பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் இசிஇ, இஇஇ மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

பாவூர்சத்திரம், ஏப். 26:  பாவூர்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், வளாகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக இயக்குநர் ராஜேஷ் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். கோவை கலிபர் இன்டர்கனைக்ட் நிறுவன மேலாளர் மோகனசுந்தரம், ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்த 91 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசினர்.

மேலும் மாலையில் நடந்த விழாவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமதி, சென்னை கார்போரெண்டம் யுனிவர்சல் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர்கள் கார்த்திக் பாண்டியன், சுந்தர் ஜெகன் ஆகியோர் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த 120 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசினர்.

தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ரமேஷ், பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அலுவலர் மணிராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர், கல்லூரி துறை தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை தலைவர் லூர்து மேரி மற்றும் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் ஆண்றோ ஊர்சுல் ஜெப்ரி மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: