தாம்பரம், ஏப்.26: பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன. பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், காய்கறி, மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரமாகும் குப்பை, கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், பல இடங்களில் முறையாக குப்பைகளை அகற்றாததால், முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. குறிப்பாக, 19வது வார்டு மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சரிவர குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை. இதனால், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், திருமலை நகர் பிரதான சாலை, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ராதா நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள், 24வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.