திருமணம் செய்ய காதலன் மறுப்புகாவல் நிலையத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி குடியாத்தத்தில் பரபரப்பு

வேலூர், ஏப்.26: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த இளம்பெண் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்(29). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நவீனும், மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நவீனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இதையறிந்த, கல்லூரி மாணவி, சில தினங்களுக்கு முன் நவீனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால், நவீன், ‘எனது பெற்றோர் விருப்பத்தை மீறி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது’ என தெரிவித்தாராம்.

இதனால், வேதனையடைந்த மாணவி குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அப்போது, திடீரென மாணவி தான் எடுத்து வந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதையடுத்து, மாணவியின் காதலனான நவீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: