ேவலூர், ஏப்.26:வேலூர் பழைய பாலாற்று பாலத்தின் அடியில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய பாலாற்று பாலம் கடந்த 1975ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழக-ஆந்திர மாநில இணைப்பு பகுதியாக இருக்கும் இந்த பாலத்தில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதில் கடந்த சில ஆண்டுகளாக பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டது. அதனை அவ்வப்போது சரிசெய்யும் பணியும் நடந்தது. அதேபோல் பாலத்தில் மின்கம்பங்கள் உடைந்தும் சேதமடைந்தது.இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலத்தின் அடியில் உறுதித்தன்மைக்காக அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் தளம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாலம் வலுவிழந்து, வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை ஆய்வு செய்தனர். பாலத்தை சீரமைக்க ₹4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.