திருப்பூர், ஏப்.26: திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாய் பாசனத்தின் மூலம் உடுமலை, தாராபுரம், வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 57 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களும், பரம்பி–்க்குளம்-ஆழியாறு பாசன பகுதிகளான பொள்ளாச்சி, செஞ்சிப்புத்துார், பல்லடம், மேட்டுக்கடை, காங்கேயம், வெள்ளக்கோயில்,முத்துார் ஆகிய பகுதிகள் என 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துபோய்ஆற்றில் தொடர் நீரோட்டம் தடைபட்டு குளம், குட்டை ஆகியவற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. விவசாயிகள் கடன் வாங்கி ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லாததால்வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து நெல்கதிர்களை வாங்கி அட்டி அமைத்து பாதுகாத்து தீவனமாக கொடுத்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் கிணறுகளில் தண்ணீரும் இன்றி வெளிமாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் செலவிட்டு தீவனம் வாங்க முடியாமல் பலஆண்டுகளாக ஆசையாய் வளர்த்த ஆடு,மாடுகளை அடிமாட்டுவிலைக்கு விற்று தொழில்நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.