ஈரோடு, ஏப். 26: ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் கூறியிருப்பதாவது: உலக அளவில் கோதுமை மற்றும் நெற்பயிருக்கு அடுத்தபடியாக, மக்காச்சோளம் முக்கிய உணவு பயிராக உள்ளது. இதில், ஏற்படும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கோடை உழவு செய்யவும், விதை நேர்த்தி செய்து விதைப்பதும் அவசியமாகிறது.அனைத்து பகுதிகளிலும், பரவலாக கோடை உழவு செய்யப்பட்டு வருகிறது. மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு வளர்ச்சி மற்ம் தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பு பயிர்கள், நச்சு கவர்ச்சி பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்து பயன்பெறலாம். வயலை சுற்றி தட்டை, உளுந்து போன்ற பயறு வகை பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும், சூரியகாந்தி ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்து பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும், கிளாசிடியா அல்லது சாமந்தி போன்ற ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களை தடுப்பு பயிராகவும், வரப்பு பயிராகவும் விதைக்கலாம்.