×

பஸ் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

ஈரோடு, ஏப். 26: ஈரோட்டில் பஸ் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் விருதாசலம் கார்குடல் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த செல்வம் மகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (27). எலக்ட்ரீசியன். இவர், வேலை நிமித்தமாக நேற்று ஈரோட்டிற்கு வந்தார்.  பின்னர், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். நாச்சியப்பா வீதி வழியாக பஸ் சென்றபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பாக்கெட்டில் இருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி பின்னால் நின்றிருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூச்சல்போட்டதும், அந்த நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதைப்பார்த்து பொதுமக்களும், சக பயணிகளும் அந்த 2 மர்மநபர்களையும் மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர்கள், கன்னியாகுமரி மாவட்டம் தொகுப்பு வீதியை சேர்ந்த ஒயிட்வின்(50), ஈரோடு மாவட்டம் கோபி கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (40) என தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : passengers ,cellphone passenger ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!