ஈரோடு, ஏப்.26: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலணி, சீருடை, நோட்டு புத்தகம், கணினி, சைக்கிள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில், தொடக்கப்பள்ளியுடன் கூடிய அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை சதவீதத்தை உயர்த்த பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-19 கல்வியாண்டு முடிந்து கடந்த 22ம் தேதி முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்கை சதவீதத்தை உயர்த்தும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.