பவானி, ஏப்.26: ஈரோடு மாவட்டம் பவானி அருகே கார் மோதியதில் பைக்கில் வந்த இருவர் பலியாகினர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அம்மாபேட்டை அருகே உள்ள கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (33). இவரது மைத்துனர் முனிசாமி (30). இவர், பூனாச்சி நத்தமேட்டில் வசித்து வருகிறார். கட்டிடத் தொழிலாளர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு நத்தமேடு பகுதியில் இருந்து பூனாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பெரியாண்டிச்சியம்மன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக்கின் மீது மோதியது.
இதில், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோதிய வேகத்தில் காரும் ரோட்டில் கவிழ்ந்தது. கார் டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். அம்மாபேட்டை போலீசார் சடலங்களை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்திற்கு காரணமான கார் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை - அந்தியூர் ரோட்டில் மறியல் செய்தனர்.போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.