பாபநாசம், ஏப். 26: பாபநாசம் பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள், வணிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதேபோல் பாபநாசம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னறிவிப்பின்றி பலமுறை மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜகிரி அப்துல் ரசீது கூறுகையில், தமிழகம் மின் மிகை மாநிலமாகி விட்டது என்கின்றனர்.ஆனால் பாபநாசம் பகுதியில் எப்போது மின்சாரம் போகும் என்பது தெரியவில்லை. கடும் வெப்பத்தில் வீட்டில் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியவில்லை.தொடரும் மின்வெட்டால் வணிகர்கள் மட்டுமல்லாது வீடுகளில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். பகலை விட இரவில் மின்தடை ஏற்படுவது அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.