டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஏப். 26: டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க வலியுறுத்தி தஞ்சையில் சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்தார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, தரைக்கடை சங்க செயலாளர் மில்லர்பிரபு, முறைசாரா சங்க செயலாளர் பேர்நீதி ஆழ்வார் முன்னிலை வகித்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் நிர்வாகம் இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். நீதிமன்றம் தடையாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதை கணக்கில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் உடனே பொது பணியிடமாறுதல் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். பணியிட மாறுதல்களுக்கு ஊழியர்களின் பணிமூப்பை அடிப்படையாக எடுத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊழியரின் பணிகாலத்தை ஆவணப்படுத்தும் வகையில் சர்வீஸ் புத்தகம் பராமரிக்க வேண்டும்.டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தொடர் கொலைவெறி தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். கடைகளில் வசூலாகும் தொகையை கடைகளில் இருந்து நேரடியாக வங்கி மூலம் வசூல் செய்யும் வசதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளிலும் கேமரா பொருத்த வேண்டும். கடைகளின் விற்பனை நேரம் இரவு 10 மணி என்பதை குறைத்து இரவு 8 மணியாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories: