திருச்சி, ஏப். 26: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் தேரோட்டத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து கிராமமக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இத்தகைய சிறப்புமிக்க சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். 3.45 மணிக்கு கொடி மரம் மண்டபத்தை அடைந்தார். காலை 4.30 மணிமுதல் 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் சித்திரை தேர்திருவிழாவின் கொடியினை அர்ச்சகர்கள் ஏற்றினர். 6 மணிக்கு கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 6.30 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.