ஏர்போர்ட், ஏப் .26 : பொன்மலையில் ரயில்வே காலனி காலனி 100 வருடம் பழமை வாய்ந்ததுஆகும். ரயில்வே ஊழியர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதியாக இது விளங்குகிறது. ஆனால், தற்போது குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சிதிலமடைந்து, சீமை கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த காட்டு பகுதியாக காட்சியளிக்கின்றன. அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ரயில்வே ( சி) டைப் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சோலைராஜ் தலைமையிலான ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதேபோல கடந்த வாரமும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சமூக விரோதிகளின் செயல்களால்தான் இது போன்று அடிக்கடி தீ ப்பற்றி எரிகிறது. இந்த பகுதியில் உள்ள சிதிலமடைந்த ரயில்வே குடியிருப்புகள் முழுவதையும் இடிக்க வேண்டும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.