×

சோலைநகர் சாவில் திடீர் திருப்பம் வாய்க்காலில் சடலமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்

புதுச்சேரி, ஏப். 25:  புதுவை சோலைநகர் அருகே வாய்க்காலில் சடலமாக கிடந்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓசி சாராயம் கேட்டதால் அவரை 3 வாலிபர்கள் அடித்தே கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். புதுவை வைத்திக்குப்பம், மாரியம்மன் கோயில் வீதி பழைய சாராய ஆலை குடியிருப்பு பகுதி வாய்க்காலில் கடந்த 22ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார், அங்கு விரைந்து சென்று, தலையில் காயத்துடன் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்ததில் துப்பு துலங்கியது. இறந்த நபர் வானூர் அடுத்த குயிலாப்பாளையம் ராமதாஸ் மகன் பரத் (25) என்பதும், கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகாததும் தெரியவந்தது. சம்பவத்தன்று சினிமா பார்க்க செல்வதாக கூறி விட்டு புதுவை வந்த அவர் எதற்காக சோலை நகர் பகுதிக்கு சென்றார்? அங்கு என்ன நடந்தது? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. உறவினர்களை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு வரவழைத்த போலீசார், பரத் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

 இதற்கிடையே பிரேத பரிசோதனையில் பரத் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கிழக்கு எஸ்பி மாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொலை வழக்காக (302) மாற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவத்தன்று யார், யார்? அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர், அவருடன் சுற்றித் திரிந்தவர்கள் யார்? என்பதை வைத்தும் விசாரித்தனர். பரத் கொலை செய்யப்படுவதற்கு முன் கருவடிக்குப்பம் சாராய கடைக்கு சென்றுள்ளார். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சின்னையாபுரம், குருசுகுப்பத்தை சேர்ந்த அருண்குமார், மனோஜ்குமார், ஏழுமலை ஆகிய 3 பேரும் பரத்துடன் சேர்ந்து சாராயம் குடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கான காரணங்கள் தெரியவந்தது. சம்பவத்தன்று 3 பேரும் கருவடிக்குப்பம் சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றுள்ளனர். அப்போது பரத்தும் சாராயம் குடிக்க அங்கு வந்துள்ளார்.

அவரிடம் பணம் இல்லாததால் 3 பேரிடம் சாராயம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள், சாராயம் வாங்கி கொடுக்க மறுத்துள்ளனர். ஆனாலும் அவர்களிடம் சாராயம் வாங்கித்தர கேட்டு பரத் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். இதனால் வேறு வழியின்றி சாராயம் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், டார்ச்சர் செய்ததிற்கு அவரை பழிவாங்க முடிவு செய்தனர். இதற்காக பரத்தை 3 பேரும் முத்தியால்பேட்டைக்கு அழைத்து சென்று சரமாரி கற்களால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத் இறந்துள்ளார். இதனால் பயந்துபோன அவர்கள், சடலத்தை சாக்கடையில் வீசி விட்டு தலைமறைவாகி உள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : death ,Sonali Nagar ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...