கோவை, ஏப். 25: கோவை தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் கரகம், தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு, சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இதனைதொடர்ந்து, நேற்று காலையில் பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் இருந்து கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.இதில் 7 ஆயிரம் பெண்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.