கோவை, ஏப்.25: கோவையில் குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை சிங்காநல்லுார் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 22ம் தேதி இரவு அரசு பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. இதனை கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(43) என்பவர் ஓட்டினார். பேருந்து ஒண்டிப்புதூர் பாலம் அருகே சென்ற போது பாலத்தின் மீது பேருந்து உரசியது. இதனால் பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். அப்போது டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் பயணிகள் இருகூர் பிரிவு அருகே பேருந்தை சிறைபிடித்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்து விரைந்து வந்த போலீசார் டிரைவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக காங்கயம் பஸ் டிப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.