பொள்ளாச்சி, ஏப்.25: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்காளக பெய்த கோடை மழையால், மானவாரி பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகியுள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர்களான மக்காசோளம், நிலக்கடலை, தட்டைபயிர் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தை பட்டத்தை எதிர்நோக்கி பயிர்கள் விதைக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. இதில் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், மானாவாரி பயிரிட விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவ்வப்போது தொடர்ந்து சில மணிநேரம் கோடை மழை பெய்தது. இதனால் விவாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மானாவாரி பயிர்களை விதைக்க துவங்கியுள்ளனர்.