கோவில்பட்டி, ஏப்.25: கோவில்பட்டி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள்சாய்ந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில்பட்டி, கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை இடிமின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதில் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம், ஜமீன்தேவர்குளம் மற்றும் செட்டிக்குறிச்சி போன்ற கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இன்னமும் ஒரு வாரத்தில் வாழைகளில் இருந்து குலைகள் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், சூறாவளி காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் நாசமாகி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சரியான பருவம் இல்லாத நிலையில், கிணற்றில் இருந்த தண்ணீரை கொண்டு வாழைகளை பயிரிட்டு இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றால் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.